29 July 2026
Back to Articles
மார்க்கம் vs உலகம்: தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவை
Tamil

மார்க்கம் vs உலகம்: தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவை

Published: Jul 14, 2026

மார்க்கம் vs உலகம்: தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவை

உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸூர்

பணிப்பாளர்,

மிஷ்காத் ஆய்வு நிறுவனம்

https://www.youtube.com/watch?v=slTaHFLKdog

(இஸ்லாமியப் பார்வையில் மார்க்க செயல்களும் உலக செயல்களும் என்ற விரிவுரையின் சுருக்கமான எழுத்து வடிவம் இதன் முழுமையான உரையை மேலே உள்ள இணைப்பில் பார்க்கலாம்)

ஒரு மனிதன் பள்ளிவாசலில் நின்று இறைவனைத் தொழுவதும், அதே மனிதன் கடைத்தெருவில் வியாபாரம் செய்வதும் வெவ்வேறான செயல்களா?

இஸ்லாம் ஒரு ‘முழுமையான வாழ்க்கை முறை’ என்று நாம் மேடைகளில் முழங்கினாலும், நடைமுறையில் மார்க்கக் கல்வியைத் தனியாகவும், உலகக் கல்வியைத் தனியாகவும் ஏன் பிரித்துப் பார்க்கிறோம்?

தொழுகையை ஒரு புனிதமானச் செயலாகவும், வாழ்வாதாரத்திற்காகச் செய்யும் கல்வியையோ அல்லது தொழிலையோ புனிதமற்ற ஒன்றாகவும் கருதும் போக்கு நம்மில் பலரிடம் நிலவுகிறது. இந்த இருமை நிலையைச் சீர்செய்யாமல் இஸ்லாத்தின் முழுமையை நாம் உணர முடியாது.

18ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு இஸ்லாமியச் சிந்தனைத் தளத்தில் நிலவிய தேக்க நிலையை உடைக்க முற்பட்ட அறிஞர்கள், இந்தச் சிக்கலுக்கான தீர்வை மிகத் தெளிவாக முன்வைத்துள்ளனர். நாம் மார்க்கத்தையும் உலக வாழ்வையும் அணுகும் முறையில் புரிந்துகொள்ள வேண்டிய 5 அடிப்படை உண்மைகளை இங்கே காண்போம்.

1. மார்க்கம் vs உலகம் – ஒரு மீளாய்வு

18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து ஜமாலுத்தீன் ஆப்கானி, முஹம்மது அப்துஹு போன்ற அறிஞர்கள் இஸ்லாமியச் சிந்தனையில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தனர். அவர்கள் ஷரீஆ கலைகளை (தப்ஸீர், ஹதீஸ், ஃபிக்ஹ்) மீளாய்வுக்கு உட்படுத்தி சீர்திருத்தங்களை செய்ததோடு, நவீன காலச் சிந்தனைச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இஸ்லாத்திற்கான கோட்பாட்டு விளக்கமொன்றையும் உருவாக்கினார்கள்.

இந்த வகையில், பழைய ஷரீஆ நூல்களை தர்க்க ரீதியாக ஒழுங்குபடுத்தி அவற்றை சமகால அறிவு நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் சீர்படுத்தினார்கள். இது மார்க்கத்தைப் புறக்கணிப்பதல்ல, மாறாக அதன் உண்மையான தோற்றத்தைச் சமகாலத்திற்கு ஏற்ப வெளிப்படுத்துவதாகும்.

பழைய ஷரீஆ கலைகளின் ஒழுங்குமுறைகளை மறுபரிசீலனை செய்து, அவற்றைச் சமகாலச் சிந்தனைச் சவால்களுக்குப் பதில் சொல்லும் விதமாக மீள் ஒழுங்குபடுத்துவது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். அப்போதுதான் இஸ்லாத்தின் கோட்பாட்டு விளக்கம் சாமானியர்களுக்கும் தெளிவு பெறும்.

2. மார்க்கத்தின் ‘உயர்வு’ என்பது எங்கே இருக்கிறது?

"இஸ்லாம் மற்ற கொள்கைகளை விடவும் உயர்ந்தது" என்று நாம் கூறும்போது, அந்த உயர்வை எதில் வைத்துத் தீர்மானிக்கிறோம் என்பது மிக முக்கியமானது. பெரும்பாலும் மார்க்க அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவும் கிளைச் சட்டங்களையோ அல்லது காலத்திற்குக் காலம் மாறிவரும் நிர்வாக முறைகளையோ வைத்து இஸ்லாம் உயர்வானது என காட்டி வாதிடுவது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.

இறை வசனங்களும் மனித ஆய்வு முடிவுகளும் கலந்த சட்டங்களுக்கும் (இலாஹியுன் வ வழ்யியுன்), தூய இறைச் சட்டங்களுக்கும் (இலாஹியுன் மஹ்ல்) இடையிலான வித்தியாசத்தை நாம் உணர வேண்டும். உதாரணமாக, சிறுவயதுத் திருமணம், பெண்களுக்குக் காழி (நீதிபதி) பதவி வழங்குதல் அல்லது ஆட்சித் தலைமை போன்ற விவாதத்திற்குரிய விஷயங்கள் ‘இலாஹியுன் வ வழ்யியுன்’ எனப்படும் மனித ஆய்வு முடிவுகள் கலந்த சட்டங்களின் கீழ் வருகின்றன. இத்தகைய கிளைச் சட்டங்களில் நிலவும் மாறுபட்ட கருத்துக்களை இஸ்லாத்தின் உயர்வுக்கான அளவுகோலாகக் கொள்ள முடியாது.

மாறாக, இஸ்லாத்தின் அசைக்க முடியாத அடிப்படைகளான நம்பிக்கைக் கோட்பாடுகள், சமூக நீதி மற்றும் “ஆன்மா, உடல், அறிவு" ஆகிய மூன்றும் இணைந்தவனே மனிதன் என்ற குர்ஆனியக் கோட்பாடு போன்ற பல அம்சங்களூடாகவே அதன் உயர்வைக் காண வேண்டும்.

3. 'அத்தியாவசியத் தேவைகள்' - சட்டத்தின் ஆன்மா

இஸ்லாமியச் சட்டங்கள் அனைத்தும் ‘ழரூரியாத்துல் ஹம்ஸ்’ எனப்படும் ஐந்து அத்தியாவசியத் தேவைகளைப் பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. இமாம் கஸ்ஸாலி போன்ற அறிஞர்கள் விளக்கியபடி, மார்க்கத்தின் நலன் என்பது உலக நலன்கள் சீர்படுவதிலேயே தங்கியுள்ளது.

1. மார்க்கம்: ஆன்மீக விழுமியங்களைப் பாதுகாத்தல்.

2. உயிர்: மனித உயிரின் புனிதத்தைப் பாதுகாத்தல்.

3. அறிவு: சிந்தனைத் தெளிவையும் கல்வியையும் பாதுகாத்தல்.

4. பரம்பரை: குடும்ப அமைப்பையும் சந்ததிகளையும் பாதுகாத்தல்.

5. செல்வம்: பொருளாதார நீதியையும் சொத்துரிமையையும் பாதுகாத்தல்.

எந்தவொரு சட்டமும் இந்த ஐந்து நலன்களுக்குள் அடங்கும். "உலக நலன்களைச் சாத்தியப்படுத்துவதே சட்டங்களின் இலக்கு; அதன் மூலமே மார்க்க நலன் சாத்தியமாகும்" என்பதுதான் இமாம் கஸ்ஸாலியின் தெளிவான பார்வையாக உள்ளது.

4. இபாதத் (வணக்கம்) vs ஆதாத் (வழக்காறுகள்) - ஏன் வேறுபடுத்த வேண்டும்?

இஸ்லாமியச் சட்டத் துறையில் வணக்க வழிபாடுகளையும், மனித நடைமுறைகளையும் நாம் தெளிவாகப் பிரித்துப் பார்க்க வேண்டும். இந்த வேறுபாடு வெறும் கலைச்சொல் சார்ந்ததல்ல, அது சட்டத்தின் தர்க்கம் சார்ந்தது.

i. வணக்கங்கள்:

இங்கே நாம் "ஏன், எதற்கு?" என்ற காரணங்களைத் தேடக் கூடாது. உதாரணமாக, சுபஹ் தொழுகை ஏன் இரண்டு ரக்அத்கள்? ருக்கூவுக்கும் சுஜூதுக்கும் ஏன் இவ்வாறன வடிவங்களில் காணப்படுகின்றன? என்ற காரணங்களை நாம் ஆராய்வதில்லை. அவை இறைவனுக்குப் பணியும் ‘தஅப்புதி’ எனப்படும் வழிபாட்டு முறைகள். இதில் மாற்றங்களுக்கு இடமில்லை.

ii. உலக நடவடிக்கைகள்:

நிர்வாகம், வியாபாரம் போன்ற மனித வழக்காறுகளில் நாம் "நலன்" எதில் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். இது காலத்திற்கு ஏற்பவும் மக்களின் தேவைக்கு ஏற்பவும் மாறக்கூடியது.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் ஸகாத்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீர்ப்பாசனம் மூலம் விவசாயம் செய்பவர்களுக்கு ஸகாத் விகிதத்தைக் குறைத்தார்கள். காரணம், அதில் உழைப்பும் செலவும் அதிகம்.

அதே தர்க்கத்தைப் பயன்படுத்தி, இன்று நவீன விவசாயத்தில் உரங்கள், கிருமிநாசினிகள் மற்றும் இயந்திரங்களுக்கான செலவுகளைக் கழித்துவிட்டு ஸகாத் கணக்கிடப்பட வேண்டும் என்று இன்றைய அறிஞர்கள் கூறுகின்றனர்.

வணக்கங்களில் காரணம் தேடாத நாம், இத்தகைய உலக நடைமுறைகளில் 'நலனை' அடிப்படையாகக் கொண்டு சட்டங்களை அணுக வேண்டும் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

5. நபித்துவத் தூது vs தலைமைத்துவ நிர்வாகம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல்களை நாம் இரு கோணங்களில் பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

அவர்கள் ஒரு இறை தூதராக வழங்கிய வழிகாட்டல்கள், சட்டங்கள் நிலையானவை; அவை மறுமை வரை மாறாதவை. ஆனால், அவர்கள் ஒரு நாட்டின் தலைவராக எடுத்த நிர்வாக முடிவுகள் 'ஸியாஸா ஷரஇய்யா' எனப்படும். உதாரணமாக, அவர்கள் கவர்னர்களை நியமித்தது, ஸகாத் கணக்குகளை எழுதி வைத்தது போன்றவை அக்காலச் சூழலுக்கு ஏற்ற நிர்வாக கட்டமைப்பு முறைகள்.

இன்று நாம் அதே நிர்வாக கட்டமைப்பு முறைகளை அப்படியே பின்பற்ற வேண்டியதில்லை. மாறாக, அதன் 'நோக்கத்தை' கவனத்திற்கொண்டு குறிப்பிட்ட கால சூழ்நிலைகளுக்கேற்ப ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டும்.

நவீன காலத்தில் நாம் பின்பற்றும் போக்குவரத்துச் சட்டங்கள், சுகாதார நிர்வாகம், கல்வி நிர்வாகம் அந்த 'ஸியாஸா ஷரஇய்யா' என்பதன் சமகால வடிவங்கள் ஆகும். இவை கால மாற்றத்திற்கு ஏற்ப புதிய வடிவம் பெறுவதை இஸ்லாம் முழுமையாக அனுமதிக்கிறது.

மார்க்கம் என்பது வெறும் பள்ளிவாசலோடு முடிந்துவிடும் ஒன்றல்ல. அது நாம் உலகை அணுகும் விதம், செய்யும் வியாபாரம், நடத்தும் நிர்வாகம் என அனைத்திலும் வெளிப்பட வேண்டும். மார்க்கக் கல்வியும் உலகக் கல்வியும் வெவ்வேறானவை அல்ல; இரண்டும் மனிதனின் மறுமை மற்றும் இம்மை வெற்றிக்குத் தேவையானவையே.

இஸ்லாம் ஒரு உயர்ந்த மார்க்கம் என்பதை,

அதன் நிலையான, இறைவன், மனிதன், பிரபஞ்சம் பற்றிய கோட்பாடுகள், சமூக வாழ்வுக்கான மாறாத சட்டங்கள், வழிகாட்டல்கள்

என்பவற்றின் மூலமே காண வேண்டும்.

Full Video Podcast Discussion